Sunday, October 26, 2008

புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! - வாசன்

காங்கிரஸ் புலிகளை மறக்கவுமில்லை! மன்னிக்கவுமில்லை! என்று மத்திய அமைச்சர் வாசன் குறிப்பிட்டுள்ளார்

http://thatstamil.oneindia.in/news/2008/10/26/tn-we-cant-forget-and-forgive-ltt.html

செய்த தவறுக்காக வருந்துபவர்களை மன்னிபதும் மறப்பதுவும் தான் உயர்ந்த மனிதர்களுக்கு அழகு!

உயர்ந்த மனிதனாக நடந்துகொள்வதா,வேண்டாமா என்று காங்கிரசும் வாசனுமே தீர்மானித்து கொள்ளட்டும்!

Monday, October 20, 2008

தமிழ் உணர்வு என்ற தன்மான உணர்வு மிஞ்சி இருப்பர்வர்களுக்கு மட்டும்!

ராமேஸ்வரத்தில் போராளி "சீமான்" பேசிய பேச்சின் வீடியோ.


http://blog.sajeek.com/?p=421


"போராளி" சீமான் சொன்னது போல "போராட்டத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்,தமிழீழத்திற்கான அங்கீகாரம் பெற அரசியலை நாம் செய்வோம்"

புரட்சி வெல்லும்! அதை நாளை மலரும் "தமிழீழம்" சொல்லும் !

Friday, September 5, 2008

நொய்யல் - தொலைந்த தடங்கள் (Noyyal - Lost Path)

இறந்து கொண்டிருக்கும் நதியோடே ஒரு பயணம் (A journey with a dying river)


Online Videos by Veoh.com


மாற்று இணைப்பு

Tuesday, August 19, 2008

யாரை ஏமாத்த பாக்கறீங்க? - அடுத்த விஜயகாந்த் காமெடி

காலையில் அலுவலகத்தில் செய்தி உலா வந்த பொது இந்த நியுஸை படித்து சிரித்த சிரிப்பில் இடமே ரணகளமானது

தட்ஸ்தமிழ் செய்தி

என்ன கொடுமை விஜயகாந்த் இது?

Gaptan எப்படி லாஜிக்கா அடிச்சாரு பாத்திங்களா? ஹும் நாங்க யாரு? :-)

அடுத்த முதலமைச்சர் Candidate-ன் பொது அறிவை பார்க்கும் போது இம்சை அரசன் 23ம் புலிகெசி, கைப்புள்ள வடிவேலு தான் ஞாபகத்துக்கு வர்ராங்க. இதுக்கு வடிவேலே பரவாயில்ல ......... இந்த ரெண்டு காமெடி வீடியோவையும் பாருங்க.

ஆட்சிக்கு வந்தால் ஒரே கிளு கிளுப்பா இருக்கும்! :-)



Sunday, July 27, 2008

நெத்தியில கத்தை ரூபா..நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..!



நெத்தியில கத்தை ரூபா

கருக்கரிவாள் தீட்டி வச்சு
கருத்த தேகம் வாட்டி வச்சு
சூரியனே வேர்வையில
மூழ்கிப் போற அளவு... -- காட்டுல
பாடுபட்டும் வேட்டிமுனையில
முடிஞ்சதென்ன வரவு...
கல்லுடைச்சு மண் குழைச்சு
காத்தடிக்க சாரம் கட்டி
உசுரு ஊஞ்சலாட
உழைச்சு உழைச்சுப் பாத்தே -உன்னோட
உள்ளங்கையில் மிச்சமென்ன
ரேகைதான சேத்தே...
முப்பது நாள் வேலை செஞ்சு
மொதத் தேதி வாங்கினாக்கா
பாலு, மளிகை, மாத்திரைக்கே
பாதிக்குமேல் போச்சு -மத்த
செலவையெல்லாம் சமாளிச்சே
கடன்கார்டை தேச்சு...
ஓடு போல தேஞ்சு போயி
உக்காந்து டி.வி. பாத்தா... - ஒரு
ஓட்டு போட கோடி வாங்கி
காட்டுறானே கட்டு கட்டா...
நீயும் நானும் செத்துப் போனா
நெத்தியில ஒத்த ரூபா...
நம்ம ஜனநாயகம் செத்துப் போச்சே - அது
நெத்திக்குத்தான் இந்த கத்தை ரூபா...

- ஆரா

நன்றி ஆனந்த விகடன்...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..
வாழ்க ஜனநாயகம்

பண முதலைகளின் ... கழுவறதுக்கு
நாலைந்து பசு மாடு மேய்ச்சுட்டுப் பிழைக்கலாம்.!

இந்த பிழைப்புக்கு Harvard,Oxford, பட்டங்கள் எதுக்கு?
கோடி கொடுத்து ஆட்சி பண்றதுக்கு
தெருக்கோடியில் பிச்சை எடுத்து வாழலாம்..

வெட்கக் கேடு த்தூ..

Monday, June 30, 2008

அடுத்த ஆட்டைய போட்டுட்டாங்களா? - கோவை சென்னை இன்டர்சிட்டி ரயில் எர்ணாகுளம் வரை நீட்டிப்பு

ஏற்கனவே கோவை - பெங்களூரு இன்டர்சிட்டி ரயிலை முழுங்கியது போதாது என்று கேரளாவின் அடுத்த ஸ்வாகா.... பேசாமல் தென்னக ரயில்வே என்பதை கேரள ரயில்வே என்று மாற்றி விடலாம். கோயமுத்தூர் எம்.பி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர் பொங்கலூரார் எல்லாம் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை.


http://dinamalar.com/pothunewsdetail.asp?News_id=3862&cls=row4&ncat=TN

Tuesday, June 24, 2008

எத்தியோப்பியாவும் உலகமயமாதலும்..!

நண்பர் பிரகாஷ் அனுப்பிய சேவியர் அவர்களின் வலைத்தள கட்டுரை

(தமிழோசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

உலகம் பல்வேறு இலட்சியங்களை தங்கள் முன்னால் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நவீன யுகத்தின் பிரதிநிதிகள் என தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், ஆவேசமும் நாடுகளிடையே மேலோங்கியிருக்கின்றன.

மண் இருக்கிறதா, மலை இருக்கிறதா, தண்ணீர் இருக்கிறதா, உயிர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்ய இனிமேல் எந்தக் கிரகத்துக்குத் தனது விண்கலத்தை அனுப்பலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது அதிகார அமெரிக்கா.

எந்த நாட்டின் மீது போர் தொடுக்கலாம், போரில் எத்தனை கோடி டாலர்கள் செலவிடலாம் என்றெல்லாம் அவர்கள் வரையறைகளை செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எத்தியோப்பியாவிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு படம் உயிரை உலுக்குகிறது.

வேறு கிரகத்தில் உயிர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்கிறாயே, இதோ இந்த எத்தியோப்பிய எலும்புக் கூடுகளுக்குள் உயிர் இருக்கிறதே அதைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தாய் என உலக நாடுகளின் காதுகளை நோக்கிக் கூச்சலிடத் தோன்றுகிறது.

போர்களும், நவீனயுகத்தின் ஆடம்பரங்களும் உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விட, நிராயுதபாணியாய் நிர்வாணியாய் நிற்கிறான் வயிறு காய்ந்த மனிதன்.

உலகமயமாக்கம் என்னும் மாயை எதைச் சம்பாதித்திருக்கிறது ? . உலகம் முழுவதிலும் இருக்கும் பட்டினியைத் துடைக்க ஒரு உலக மயமாதல் நிகழ்ந்திருந்தால் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளியிருக்கும்.அல்லது குறைந்தபட்சம் சமாதானத்தையும், நிம்மதியையுமாவது உலகமயமாக்கியிருக்கலாம். அதுவும் இல்லை.

வெறும் கரன்சிகளைக் கொள்ளையடிக்கவும், நலிந்தவர்களின் நட்டெலும்பை முறிக்கவும் மட்டுமே இந்த உலகமயமாக்கல் பிசாசுப் பற்களை ஒளித்து வைத்துச் சிரிக்கிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் வாங்கப்படும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒருபகுதி வீணாக்கப் படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


நாளை விடியும்போது விழிப்போமா என்பதை அறியாமல், ஒருவேளை உணவை உண்டே பல நாட்களாகிப் போன கூட்டம் இன்னும் எத்தியோப்பியாவின் நரகத் தெருக்களில் நடக்க முடியாமல் நகர்ந்து திரிகிறது.

அடிப்படை வசதிகளில் முதன்மையான உணவே கனவாகிப் போனபின் அங்கே எதைத் தான் எதிர்பார்க்க முடியும். "எத்தியோப்பியாவைப் பார்த்தபின், வீணாக்கப்படும் உணவைப் பார்த்தால் உள்ளுக்குள் கோபம் கொப்பளிக்கிறது" என்றார் அன்னை தெரசா ஒருமுறை.

உணவகங்களிலும், நடன அரங்குகளிலும், ஆடம்பரப் பொருட்களிலும், உல்லாசக் கொண்டாட்டங்களிலும் பணத்தை வாரி இறைக்கும் போது எத்தொயோப்பியக் குழந்தையின் கதறல் கேட்கவில்லையெனில் யாரும் மனித நேயம் மிச்சமிருப்பதாய் சொல்லிக் கொள்ள முடியாது.

பல இலட்சம் மக்கள் தங்கள் எலும்புகளின் மேல் போர்த்த சதை இல்லாத பட்டினிக்குள் கிடக்கும் போது, தொப்பையைக் கரைக்க வியர்க்க விறுவிறுக்க பயிற்சி அறைகளில் ஓடும் மனிதர்களைத் தான் சம்பாதித்திருக்கின்றன நாடுகள்.


எத்தியோப்பியாவைப் போலவே வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நிகழ்காலத்தில் நிற்க ஒரு நிழல் கூட இல்லையே என அழுதற்கும் திராணியற்ற மக்கள் உலகின் பலகோடியிலும் இருக்கின்றனர்.


எனினும், கண்டும் காணாததும் போல இருக்கப் பழகி விட்டது மனுக்குலம். ஓசோனில் ஓட்டை இருக்கிறதா என காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட அடுத்த வீட்டுக் குடிசையில் ஓட்டை இருக்கிறதா என பார்ப்பதில் செலவிடுவதில்லை முதலாளித்துவம்.

youtubeயின் ஓரு video

வானத்தை நோக்கியே பார்த்துப் பழகிவிட்ட மேலை நாடுகள் பூமியை எப்போது பார்க்கும் ? உலக மயமாதல் என்பது உறிஞ்சுதலுக்கானது மட்டும் தானா ? ஊற்றுதலுக்கானது இல்லையா ? எனும் கேள்விகளெல்லாம் முதுகு வளைந்து கிடக்கின்றன.

உலகம் தனது சுருக்குப் பையில் வன்முறையையும், விஞ்ஞானத்தையும், பாலியல் பிழைகளையும், சுயநல சிந்தனைகளையும் சுமந்து திரிகிறது. எத்தியோப்பியா போன்ற நாடுகளின் வறுமை விரல்கள் நறுக்கப்பட்டு வீதியில் கிடக்கின்றன.

நமது முதன்மைகள் விளையாட்டும், சினிமாவும், மேலை நாட்டுக் கலாச்சாரங்களுமாகிப் போய்விட்டன. குடும்ப உறவுகளுடன் வாழாத மக்கள் பிறருக்காகக் கவலைப்படுவதில்லை. வாழ்க்கைச் சூழல் கூட ஒருவகையில் மனித நேயத்தை, மரங்களைப் போல மனிதர்களின் மனங்களிலிருந்து முறித்தெறிகிறது.

உலகம் விழித்தெழ வேண்டும். வாழும் உரிமை எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கும் உண்டு. அங்கே இருப்பவர்களும் நமது சகோதர சகோதரிகளே, நமது குழந்தைகளே எனும் உணர்வு மேலோங்க வேண்டும்.

உலக மயமாதல் என்பது நிறுவனங்களின், வியாபாரத்தின் மீது கட்டப்படாமல், மனித தேவைகளின் மீதும், மாண்புகளின் மீதும் நிலை நிற்கும் காலம் ஒன்று உருவாகவேண்டும். அப்போது தான் எலும்புகளின் தேசமான எத்தியோப்பியாவும் எழும்பும்.

விதையில் தொடங்கி மனித உயிர்வரை மனித பண்பு உறிஞ்சுதல்,அதனால்தான் மேலைநாடுகள் வளரும்,வளராத நாடுகளைச் காலம் முழுவதும் உறிஞ்சு பெருகுகின்றனவோ?

பணம் தாரகமந்திரமாய்,உயிர்களின் விலை மலிந்து விட்டது..இயலாமையின் பிடியில் வருத்தத்துடன் நான்.

நன்றி.

http://xavi.wordpress.com/2008/06/24/globalization/

Monday, May 12, 2008

மதுரை நாயக்கர் வரலாறு

ஏமன்டி, பாகுன்னாரா?...தமிழ்நாட்டு நாயக்கர் வரலாறு பற்றி தேடிக் கொண்டிருந்தபோது அகப்பட்ட கட்டுரை. ஜெயமோகன் எழுதிய நூல் அறிமுகம். சொல்லப்பட்டவைகளின் உண்மைத்தனத்தைப் பற்றி விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் 'மதுரைநாயக்கர் வரலாறு' நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of Nayaks of Madura]]


இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய 'மதுரை நாயக்கர் வரலாறு' தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும். க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் 'தென்னிந்திய வரலாறு' டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய 'விஜயநகரத்தின் கீழ் தமிழகம்' [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டு இந்நூலை எழுதியதாக பரந்தாமனார் சொல்கிறார்.


நாயக்கர்களின் வரலாறு விந்தை மிக்க ஒன்று. வேறு ஒருநாட்டில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் அதைப்பற்றி பெரும்தொகையான நூல்கள் எழுதிக்குவிக்கப்பட்டிருக்கும். நாயக்கர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட ஆந்திரப்பகுதி மக்கள் இவர்கள். அதிகமும் பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடுமாடு மேய்த்தும் பொட்டல்வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில் நடந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகப்பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவையே சீர்குலைத்து இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் எஞ்சச்செய்து மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையையே ஆட்சியாகச் செய்துவந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து துருக்கி சுல்தான்கள் டெல்லியில் இருந்துகொண்டு தென்னகத்தை வரிகொண்டனர்.


இந்நிலையில் சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி [வித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு] துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை அவர் கவர்ந்தார். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். தங்களுக்கென சிறு படை கொண்டவர்கள். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் விஜய நகரம் என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர். [அங்கே ஏற்கனவே விஜயநகரம் என்ற பேரில் ஒரு யாதவ அரசு இருந்து அழிந்திருக்கிறது]


அக்காலத்து அரசியல் நிலையில்லமையைப் பயன்படுத்திக் கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும். இன்று இந்தியாவில் விஜயநகர ஆட்சி இருந்த பகுதிகளில்மட்டுமே மாபெரும் ஆலயங்கள் எஞ்சியுள்ளன. பிறபகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியின்போது காடுகளுக்குள் மறைந்து அழிந்துகிடந்து வெள்ளையர் ஆட்சியில் கண்டெடுக்கப்பட்ட கஜுராகோ, கொனார்க் , அஜந்தா போன்ற சில இடிபாடுகளைத்தவிர வேறெதுவும் இல்லை.


விஜயநகரம் மேய்ச்சல்நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள்த் திரள் ஒரு ஞானியின் சொற்களால் ஆவேசம்கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசாக மாறியதன் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும். கன்னடத்தில் 'மாதவ கருணா விலாசா'என்ற பழைய நூல் மொத்த விஜயநகர சாம்ராஜ்யத்தையே மாதவரின் கருணை என்று குறிப்பிடுகிறது.


புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ''மதுராவிஜயம்' என்ற சம்ஸ்கிருத காவியம் இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.


அதன்பின் மதுரை விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நாடாகவே இருந்துவந்தது. 1509ல் முடிசூடி தென்னகம் முழுவதையும் விஜயநகரம் ஆண்ட நாட்கள் அவை. விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். ஆண்டாளின் கதையை தெலுங்கில் அமுக்த மால்யதா [சூடாத மாலை] என்ற பேரில்காவியமாக எழுதியவர் [ நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்] அவர் தன் தளபதி நாகம நாயக்கனை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.


இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் 'வெற்றித்திருநகர்' என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]


விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் அரியநாத முதலியார் பல ஐதீகக்கதைகளில் புகழப்படும் வீரபுருஷன். அவர் தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் மதுரையில் ஒரு பேரரசு அமைவது அப்போதுதான். நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலை அரியநாதர் அமைத்தார். அரியநாதர்தான் தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.


அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும் , மங்கம்மாளும். கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர். மதுரையில் உள்ள நாயக்கர் மகால் அவரது பெயரை இன்றும் சொல்லும் ஒரு நினைவுச்சின்னம். நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் திருமலை நாயக்கர். பொதுவாக அமைதி நிலவினாலே செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின் நிலைமையாகும். குவிந்த செல்வத்தை கோயில்களாகவும் ஏரிகளாகவும் மாற்றினார் திருமலை மன்னர். நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். அவை ராய கோபுரங்கள் எனப்படுகின்றன. அவற்றில் சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயகக்ர் தன் இரு ராணிகளுடன் நிற்கக் காணலாம். [மிகச்சிறந்த சிலை ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் கோயிலில் உள்ளதுதான்]


நாயக்கரின் சிறப்பியல்பு சைவ வைணவ ஆலயங்களுக்கு சீராக திருப்பணி செய்ததாகும். ஒரு சைவக்கோயில் அருகே அதே அளவு வைணவக்கோயிலையும் மாற்றியும் கட்டுவது அவரது வழக்கம். கிறித்தவ மதபோதகர்களை ஆதரித்திருக்கிறார். அதை ஜெசூட் பாதிரிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.இஸ்லாமிய தர்காக்களையும் ஆதரித்திருக்கிறார். இன்றைய மதுரை என்பது திருமலை மன்னரின் ஆக்கம் என்றால் மிகையல்ல. மதுரையின் தெருக்கள் ஆலயங்கள் மாபெரும் தெப்பக்குளங்கள் சுற்றியுள்ள மாபெரும் ஏரிகள் இன்றுள்ள பெரும் திருவிழாக்கள் எல்லாமே திருமலை மன்னாரால் உருவாக்கப்பட்டவை. தென்னாடெங்கும் இன்றுள்ள ஏரிகள் தேசத்தின் விலைமதிப்பில்லா பெரும் செல்வங்கள்-- மதிப்பிட்டால் பல்லாயிரம் கோடி விலையுள்ளவை. அவை நாயக்கரின் சிருஷ்டிகளே. பல ஊர்கள் எரிகளை ஒட்டி உருவானவை. அவற்றில் பாதிப்பங்கு பேருந்து நிலையங்களாகவும் குடியிருப்புகளாகவும் தூர்வாரப்படாமலும் அழிந்துவிட்டன இன்று.


ராணி மங்கம்மாள் இன்றும் தென்னாட்டில் சாதாரணமாக நினைவுகூரப்படும் பெயர். தன் மகன் அம்மை நோயில் இறக்க பேரன் ஒருவயதுகூட இல்லாமலிருக்க மங்கம்மாள் 1689ல் ஆட்சிக்கு வந்தாள். 1706 வரை பதினேழு வருடம் ஆட்சிசெய்த மங்கம்மாள் அதிகம் போர்கள் செய்ததில்லை. படையெடுப்புகளை திருமலை மன்னரின் பெரும் செல்வத்தை திறையாகக் கொடுத்தே சமாளித்தாள். ஆனால் தென்னாட்டை போரில்லாது காத்தாள். அதனால் செல்வம் பெருகியது. மங்கம்மாள் அதிகமும் கோயில்கள் கட்டவில்லை. ஆனால் சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் பெரும் செலவுசெய்தாள். இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்-- இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]


மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாதர் மறைந்தபின் அவரது மனைவி மீனாட்சி 1732ல் தன் உறவினரான விஜயகுமாரன் என்ற சிறுவனை தத்தெடுத்து அவனை ஆட்சிப்பொறுப்பில் இருத்தி தானே ஆட்சியை நடத்தினாள். விஜயகுமாரனின் தந்தை பங்காருதிருமலை மகனுக்கு எதிராக கலகம் செய்தான். தனக்கு ஆட்சியை வாங்கித்தரும்படி தன் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரினான். ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு பெரும் தொகை லஞ்சமாகவும் கொடுத்தான்.[பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவலில் ரங்கப்பிள்ளை ''தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வதில் நாம் நிபுணர்கள்'' என்று இதைச் சொல்கிறார்]


சந்தாசாகிபிடமிருந்து தப்ப மீனாட்சி ராணி நம்பமுடியாத பெரும் தொகை [ஒரு கோடி பகோடா] லஞ்சமாக கொடுத்து தன்னை ஆதரிக்குமாறு கோரினாள். அவர் குர் ஆன் மேல் அடித்து சத்தியம் செய்து பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் அது குர் ஆன் அல்ல, ஒரு செங்கல். சந்தா சாகிப் ராணியை சிறைசெய்ய அவள் விஷம் குடித்து இறந்தாள். சந்தா சாகிப் பங்காரு திருமலையையும் கொன்று மதுரையை வென்றார். மதுரை நாயக்கர் ஆட்சி 1736ல் முடிவுக்கு வந்தது.


இந்த வரலாற்றை உணர்ச்சிகரமான நடையில் எழுதியிருக்கிறார் அ.கி.பரந்தாமனார். வரலாற்று நூல் என்று பார்த்தால் அவரது 'அந்தோ!' நடை சற்று உறுத்தலாகவே உள்ளது. ஆனாலும் 13 ஆம் நூற்றாண்டு தமிழக நிலைமையின் சித்திரத்தோடு தொடங்கி விஜயநகரின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி மதுரை நாயக்கர் வரலாற்றை விவரித்து நாயக்க ஆட்சியின் சாதனைகளை விவரித்து அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அமையும் இந்நூல் பயனளிக்கும் ஒரு நூல்தான்.


நாயக்கர் வரலாற்றில் பல விஷயங்கள் விவாதத்துக்கு உரியவை. குறிப்பாக அவர்கள் உருவாக்கிய பாளையப்பட்டுமுறை பிற்காலத்தில் பொறுப்பில்லாத பாளையக்காரர்களை உருவாக்கி அராஜகத்துக்கு வழியமைத்தது. ஆனால் இதை கண்டிக்கும் நெல்சன் போன்றவர்கள் இதே பாளையப்பட்டுகக்ளை அப்படியே ஜமீந்தார்களாக தொடரவைத்து வெள்ளையர் ஆண்டதைப்பற்றி மௌனம் சாதிக்கிறார்கள்.


தெலுங்கு பேசும் கம்பளத்தார் திரண்டுவந்து மதுரையை வென்று ஒருபேரரசை நிறுவி இந்நிலப்பகுதியை ஆண்டதும் இங்கேயே அவர்கள் நிலைத்ததும் பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் வரண்டநிலங்களில் வேளாண்மை செய்யும் முறை அவர்களால் உருவாக்கப்பட்டதே. இன்று தமிழகத்தின் முக்கியமான ஒரு சாதியாக விளங்கும் நாயக்கர்களைப்பற்றி பிறருக்குத் தெரிந்தது மிக சொற்பமே. அவர்கள் தங்கள் அடையாளங்களை தக்கவைத்து அதேசமயம் அதிகம் வெளிக்காட்டாமல் வாழ்கிறார்கள்.


இலக்கியத்தில் கி.ராஜநாராயணன் [அவர் கம்மவார் நாயக்கர்] நாயக்கர்களின் உலகை விரிவாக எழுதியிருக்கிறார். அரசியலில் ஈ.வே.ராவும் வை.கோபால்சாமியும் முக்கியமான நாயக்கர் முகங்கள். இப்போது விஜயகாந்த் [பலிஜா நாயிடு] தெலுங்கரின் முகமாக முக்கியப்பட்டு வருகிறார்.


தமிழகத்தில் தமிழ்தேசிய உருவாக்கம் நிகழ்ந்த நாற்பது ஐம்பதுகளில் தமிழகத்தின் பண்டைவரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த தயக்கங்களும் சமரசங்களும் ஆர்வமூட்டக்கூடியவை. சேரர் வரலாறு சேரநாடு கேரளம் ஆகிவிட்டது என்பதனால் சற்றே மழுப்பப்பட்டு செங்குட்டுவனுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது. பாண்டிய சோழ வரலாறுகள் எடுத்துப்பேசப்பட்டன. சைவம் வளர்த்த பிற்காலச் சோழர் வரலாறு முக்கியப்படுத்தப்பட்டு ராஜராஜ சோழன் அதன் தலைமை உருவமாக ஆனார். நாயக்கர் வரலாறு அப்படியே மறக்கப்பட்டது. தமிழ் அடையாளமாக விளங்கும் அரசு முத்திரையில் உள்ள கோபுரம் [ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ர சாயி கோயில் கோபுரம்] ஒரு நாயக்கர் கால ராய கோபுரம் என எத்தனை தமிழர்கள் அறிவார்கள்?


பரந்தாமனார் இந்த வரலாற்று உருவாக்கம் நடந்த காலத்தைச் சேர்ந்தவர். அந்த இயக்கத்தில் ஒருவர். ஆயினும் அவர் எழுதிய நாயக்கர் வரலாறு இந்த தயக்கத்தை உதறி முன்வந்து பேசுகிறது.


நாயக்கர் வரலாற்றில் எழுதப்படாதவையே அதிகம். தெலுங்கு அறிவு அதற்கு இன்றியமையாதது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் முதலிய மன்னர்கள்கூட தெலுங்கில் நிறைய எழுதியுள்ளனர். பல தெலுங்கு ஆவணங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவே இல்லை. ஏசுசபை கடிதங்களும் பல இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. தயக்கத்தை உதறி இனியேனும் தமிழ் பண்பாட்டின் தவிர்க்கமுடியாத ஒரு பெரும் அத்தியாயமான நாயக்கர் காலம் பற்றி மேலும் எழுதப்படுமென எதிர்பார்க்கலாம்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60708026&format=html

Thursday, April 3, 2008

வேப்ப மர உச்சியிலே பேயொன்னு ஆடுதுன்னு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேப்ப மரத்துக்கு பெண்கள் வளைகாப்பு வைபவம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது ரெட்டிபேட்டை என்ற கிராமம். இங்குள்ள ஒரு வேப்ப மரத்தின் அடிப்பாகம் கடந்த சில தினத்துக்கு முன்பு வீங்கி பெருத்தது.

இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் வேப்பமரம் கருவுற்றதாக கூறினர். இந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளுக்கும் பரவியது.

தகவலறிந்த மற்ற கிராம மக்கள் பூஜை பொருட்களுடன் வேப்ப மரத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். மஞ்சள் குங்கும அலங்காரத்துடன் வழிபாட்டுக்கு வேப்ப மரம் தயாரானது.

இந்தநிலையில் மரத்தின் அடிபாகம் மேலும் பருமனானதால், பெண்கள் ஒன்று கூடி, வேப்ப மரத்துக்கு விமரிசையாக வளைகாப்பு சடங்கு நடத்துவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேப்ப மரத்தை குளிப்பாட்டி, மஞ்சள்- குங்குமம் பூசி பூ மாலையிட்டனர். பிறகு அதற்கு ஜரிகைப் பட்டுப் பாவாடை கட்டிவிட்டு ஜோடித்தனர். பெண்கள் வரிசையாக வந்து வேப்ப மரத்தின் கிளைகளில் கண்ணாடி வளையல்களை கட்டித் தொங்கவிட்டனர்.
வளைகாப்பு ஐதீகமாக, ஐந்து வகை உணவு படைக்கப்பட்டு வந்தவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு செய்வதை போல வேப்ப மரத்துக்கு சிறப்பாக வளைகாப்பு நடத்தி முடித்துள்ளனர் அந்த ஊர் பெண்கள்.


---- என்னத்த சொல்ல? சுகப்பிரசவம் ஆச்சுன்னா சொல்லி அனுப்புங்க.....ஆமாம் யார் அந்த களவாணிப் பய? மரத்தைக் கூட.......... :-)

Monday, March 10, 2008

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள்! உங்களிடம் இருக்கிறதா அந்தத் துணிவும் துடிப்பும்?

இது நண்பர் ராஜ்குமாருடைய நீங்க திமிராவனாரா? என்ற பதிவுக்கு நீண்ட பின்னூட்டம்.

திமிரு என்பதோட நாகரீகமான சொல் வந்து "ஞானச்செறுக்கு". பாரதி, பெரியார் இவங்ககிட்ட இருந்தது அந்தச் செறுக்கு தான். பேசாப் பொருளைப் பேசத் துணிவது.

அது தான் "பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.. வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலமும் போச்சே"ன்னு பாரதியையும்,

"பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இந்தக் கடவுள்களுக்கெல்லாம் எத்தனை கோயில்கள்? எத்தனை வேளை பூசைகள்? எத்தனை கல்யாணங்கள்? இதெல்லாம் போதாதென்று தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு போகிறானே!

சென்ற ஆண்டு செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று யாராவது கேட்கிறார்களா? நாம் எல்லாம் முட்டாள்கள் என்பதால்தான் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். நம்மைவிடக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள். இந்த காலத்தில் நாம் சாமிக்குக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதா?

எங்களூரிலுள்ள ஒரு சாமிக்கு ஒன்றரை மூட்டை அரிசியைப் போட்டு ஒரு வேளைக்கு சமைத்துப் படைக்கிறார்கள். சாமியா தின்கிறது?" என்று பெரியாரையும் சொல்ல வைத்தது.

சமுதாயத்தின் அத்தனை ஓட்டைகளையும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கேள்வி கேட்டது ஞானச்செறுக்கு.

ஆனால் சமூகத்தில் நடக்கிற சில விஷயங்களை மட்டும் கண்டும் கண்டுக்காம, இன்னும் அந்த சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கெல்லாம் ஏதோ காரணம் இருக்கிறதுன்னு சொல்றதுக்கு பேர் கோழைத்தனம்.

பலரால் இன்னும் அந்த புனித பிம்பத்திலிருந்து வெளிய வர முடியவில்லை.

இதுக்கு பிறகு எல்லாரும், பாரதி மாதிரி ஒரு ஞானச் செறுக்கு கொள்ள முயற்சி செய்ததின் விளைவு தான் "ஜெயகாந்தன்" மாதிரி அரை குறைகள். நான் விரும்பிப் படித்த "இவன் தான் பாலா" புத்தகத்தில் ஒரு கல்லூரி விழாவில் "பாஞ்சாலி, பத்தினிக்கு பிறந்தவன் கண்களுக்கு பத்தினி, பரத்தைக்கு பிறந்தவனுக்கு பரத்தை"ன்னு சொன்னதை சிலாகித்து "என்ன ஆளுமை, என்ன ஞானச்செறுக்கு"ன்னு எழுதிருந்தது தான், அந்த புத்தகத்திலேயே காமெடியான பகுதி. சம்ஸ்கிருதம் தான் தேவபாடை.. நாய் பாஷை, நரி பாஷை எல்லாம், அம்பலம் ஏறக்கூடாதுன்னு சொன்ன போது "ஞானச் செறுக்கு" நல்லாவே வெளிப்பட்டது.

ராஜ்குமார், இன்னொரு காமெடி கட்டபொம்மன்.. இந்த சுட்டியில் சென்று பார்க்கவும். எது உண்மையின்னு தெரியலை. இருந்தாலும் சிவாஜி நடித்த கட்டபொம்மன் படம் நல்ல பொழுதுபோக்கு :-)

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள். உங்களிடம் இருக்கிறதா அந்த துணிவும் துடிப்பும்?

Sunday, March 9, 2008

நீங்க திமிராவனாரா?

நண்பர் பிரகாஷ்ராஜின் ("சொல்லாததும் உண்மை" புத்தகத்தின் மூலம் எனக்கு ரெம்ப நெருக்கமாயிட்டதால "நண்பர் பிரகாஷ்ராஜ்"ன்னு எழுதியிருக்கேன்) "சொல்லாததும் உண்மை" புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை "அவரை மாதிரியே நானும் திமிரானவன்"!

பொதுவா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு (நான்,நண்பர் பிரகாஷ்ராஜ்,நண்பர் வினு மாதிரி) யாராவது advice பண்ணி,நாங்க அதை கேக்கலைன்னா எங்களை "திமிர் பிடிச்சவன்னு" சொல்லுவாங்க.அது உண்மைதான்,நாங்க திமிர் பிடிச்சவங்கதான்!

ஆனா எங்களோட அந்த திமிரை, எங்களுக்கு advice பண்றவங்களை தாக்குற ஒரு ஆயுதமா நாங்க பயன்படுத்துறதில்லை,மாறா அவங்க அவங்களோட எண்ணங்களை,குழப்பங்களை,பயங்களை எங்க மேல திணிக்க முயற்சிக்கும் போது அதை தடுக்குற ஒரு கேடயமா பயன்படுத்துறோம்.

என்னை கேட்டா இந்த திமிர் எல்லாருக்கும் இருக்கனும்!

இப்படித்தான் ஒருத்தரு,மக்களுக்கு சிந்திக்கச் சொல்லிகொடுத்தாரு.மக்களும் சிந்திக்க ஆரம்பிச்சு,கேள்விகள் கேக்க ஆரம்பிச்சாங்க.இதை பாத்து கடுப்பான அந்த ஊர் அரசாங்கம் அவரை கூப்பிட்டு இதை எல்லாம் நிறுத்திருன்னு சொன்னது.

ஆனா அவர் ரெம்ப திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

(நாயகன் கமல் மாதிரி "அவங்களை நிறுத்த சொல்,நான் நிறுத்துறேன்" னு Dialague பேசியிருப்பாரோ? :) )

கடுப்பான அரசாங்கம் அவருக்கு "மரண தண்டனை" குடுத்துருச்சு.அப்பவும் "என்னை மன்னிச்சுடுங்கன்னு" ஒரு வார்த்தை சொல்லு,உன்னை விட்டுரோம்ன்னு சொன்னது.

அதுக்கு அவரு மறுபடியும் திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அவர் மட்டும் அன்னைக்கு திமிரா இல்லைன்னா,இன்னைக்கு நாம எல்லாருக்கும் "சாக்ரடீஸ்" ங்ற ஞானி கிடைச்சுருக்கமாட்டாரு.

நண்பர் பிரகாஷ்ராஜ் கூட "சினிமாவுல சம்பாதிச்ச பணத்தை சினிமாவுலேயே போடப் போறேன்னு" சொன்னப்ப.நிறைய பேரு வேண்டாம்ன்னு advice பண்ணினாங்க.அவர் மட்டும் திமிரா கேக்காம இருந்துருக்கலைன்னா, "அழகிய தீயே" "மொழி" மாதிரி நல்ல படங்கள் நமக்கு கிடைச்சுருக்காது.

இப்படி "பெரியார்,பாரதி,காந்தி,பகத்சிங்,கட்டபொம்மன்" ன்னு திமிர் பிடிச்சவங்க பட்டியல் ரெம்ப பெருசு.

இப்போ சொல்லுங்க "நீங்க திமிராவனாரா?"

Saturday, March 1, 2008

தமிழக தலைவர்களுக்கு பாரதியார் மேற்கொள்கள்(ஆத்திச்சூடி)

பாரதியார் இந்த மாதிரி மேற்கொள்கள் எழுதியிருக்கார் என்பது நான்
புத்தகத்தைப் பிரட்டினப்ப தான் தெரிஞ்சது.நான் தமிழில் கத்துக்குட்டி அதனால் தெரிஞ்சங்க உங்க மேலான கருத்துகளைப் பதிவு செய்ங்க நன்றி
.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன் ப சிதம்பரம்(வரிச்சலுகை)
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு ??
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம் தா பாண்டியன்.(இடதுசாரி)
ஓய்தல் ஒழி
ஒளடதம் குறை

கற்றது ஓழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல் காங்கிரஸ்
கீழோர்க்கு அஞ்சேல் மு கருணாநிதி
குன்றேன நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய் விஜயங்காந்த்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கைக் கொண்டு வாழ் ???
கல்வியதை விடேல்

சரித்திர தேர்ச்சிகொள் ஸ்டாலின்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு தயாநிதி மாறன்
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய் எழுத்தாளார் ஞானி
சேர்க்கை அழியேல் ராமதாஸ்
சைகையில் பொருளுணுர்
சொல்வது தெளிந்து சொல் தலைவர் ரஜினிகாந்த்
சோதிடந்தனையிகழ் ???

செளரியம் தவறேல்

ஞமிலிபோல் வாழேல் ??

நன்று கருது
நாளேல்லாம் வினை செய் சுப்பிரமணிய சுவாமி
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர் +2 மாணவர்களுக்கு
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை ??
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்?

பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்பு செய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு வைகோ
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு

மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று???
மொய்ம்புறத் தவஞ்செய்
மோனம் போற்று??
மெளட்டியந்தனைக் கொல்

நீங்களும் உங்க பங்குக்கு இந்த மேற்கொள்களுக்கு சேர்க்கலாம் !

Wednesday, February 27, 2008

என் இனிய சுஜாதா



எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த நிமிடம் வரை அவரது நிறைய எழுத்துக்களோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருடைய தமிழ் நடை எனை ஆட் கொண்டது.

ஒரு விமர்சகனாய் அவரது எழுத்துக்கள் திருவரங்கத்திலும், மயிலாப்பூரிலும் வந்து முடிவதாய் எனக்குப் பட்டாலும், அதுவும் ஒரு பால்ய கால வாழ்க்கையின் பாதிப்பாய் மட்டுமே தோன்றுகிறது.

இவருக்குப் பின்னால் இந்த பரந்து விரிந்த அறிவியல் தளத்தில் எழுத யார் உள்ளார்கள்?

நான் முதலில் படித்த நாவலே அவர் எழுதிய "வாய்மையே சில சமயம் வெல்லும்" தான்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆவலாய்ப் பார்த்த "என் இனிய இயந்திரா", மற்றும் அப்போது அடிக்கடி நான் விளையாட்டாய் அடிக்கடி சொல்லும் "வாழ்க ஜீவா"வும் நினைவுக்கு வந்து செல்கிறது.

பிறகு அவர் கற்றதும் பெற்றதும், முதல்வன் தொடங்கி சிவாஜி வரை எழுதிய சில வசனங்களில் (அங்கவை சங்கவை வரை)எனக்கு ஒப்புமை இல்லாவிட்டாலும், அவர் மீது இருந்த மரியாதை குறையவில்லை.

சுஜாதாவை இழந்து வாடும் அவரது எழுத்து உலக ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, February 24, 2008

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியம்சாமிக்கு தொடர்பு?

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது என்றும், புலி ஆதரவு இயக் கங்களைத் தடைசெய்ய வேண்டும்என்றும் குரல் கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் தலை வர்கள் இந்தக் குரல்களுக்கு சொந்தக்காரர்கள். இன்னொரு பக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தி, 'ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன?' என்று வேறொரு கோணத்தில் பரபரப்பு கிளப்பும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார் திருச்சி வேலுச் சாமி. இவரும் ஒரு காங்கிரஸ்காரர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்!


அவரை சென்னையில் சந்தித்தோம். ''கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்த லில், 'தலைவர் ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கான பழி தமிழன் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த அவச்சொல் அகலவேண்டும் என்றால், இந்தியாவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்...' என்று பிரசாரம் செய்தேன். சோனியா காந்தி வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் அரசு அமைந்து, நான்கு ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்துவிட்டது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகாலத்தில் ராஜீவ் கொலைக்குக் காரணமானவர்கள் பற்றி ஒருநாளாவது காங்கிரஸ்காரர்கள் பேசியதில்லை. தி.மு.க. ஆட்சியை மிரட்ட வேண்டும் என்றால் மட்டும் புலிகளைப் பிடித்துக்கொள்கிறார்கள். இதைத்தான் நான் கண்டிக்கிறேன்'' என்றவர், சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா விஷயத்துக்கு வந்தார்.


''அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி எதிர்ப்புக் குரல் கொடுக் கிறார்கள். ஆனால் இதே சுவாமி, ராஜீவ்காந்தி கொலையான சில மாதங்களில் ஜெயலலிதாவைக் குற்றம்சாட்டியது பொய்யா? ஜெயின் கமிஷன் முன்பு சுவாமி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 'ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளோடு சேர்ந்து செயல்பட்டவர் ஜெயலலிதா. அதனால், ஜெயலலிதாவையும் குற்றவாளியாகக் கருத வேண் டும்...' என்று சொல்லியிருந்தார். அந்த அஃபிடவிட் மீது ஐந்து நாட்கள்விசாரணை நடந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்காகப் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடி, கமிஷன் முன்பு ஜெயலலிதா ஆஜராவதிலிருந்து விலக்குப் பெற்றார்.

அதேநேரம், நான் ஜெயின் கமிஷன் முன்பாக ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதில், 'ராஜீவ்காந்தி கொலை நடக்கப்போகும் விவரம், சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்பே தெரியும்...' என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தேன். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜெயின், விசாரணைக்கு சுவாமியை வரவழைத்தார். அப்போது, ராஜீவ்காந்தி கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பும் பின்பும் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் வீசப்பட்டன. நாங்கள் அப்போது சுவாமி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் ஆதரவாக இருந்தவர் ஜெயலலிதா. ஆக, ஒருவர் மீது ஒருவர் ராஜீவ்காந்தி கொலையில் மாறிமாறி குற்றச்சாட்டுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள், இப்போது ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுகிறார்கள்'' என்று கொதித்த வேலுச்சாமியிடம்,

''அதுசரி, காங்கிரஸ்காரர்களை ஏன் இதில் வம்புக்கு இழுக்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.


''மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அதில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் ராஜீவ் கொலை வழக்கைக் கவனிக் கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜெயின் கமிஷன் விசாரணையின்போது கொலை தொடர்பாகப் பெறப்பட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்தது. இறுதி யில் அந்த ஆவணங்களெல்லாம் காணாமல் போய் விட்டதாக சொல்லிவிட்டார்கள். ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது பதிவான வீடியோ ஆதாரம் ஒன்றை சி.பி.ஐ. கைப்பற்றியது. அதைத் தாக்கல் செய்த போது, சில காட்சிகளை யாரோ அழித்திருந்தது தெரிந் தது. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் ராஜீவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடி ஏற்பட்டதாக பல அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர் களில் பலருக்கும் காங்கிரஸ் அரசே பதவி உயர்வு அளித்தது. இவ்வளவுதான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் கொலையின் உண்மைகள் வெளியாவதில் இருந்த அக்கறை. ப.சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ எப்போதாவது இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருப்பார் களா? தங்களுக்கு அரசியல்ரீதியாக பேசுவதற்கு விஷயம் இல்லையென்றால், 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்...' என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.


ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு முன் கூட்டியே தகவல்கள் தெரியும் என்று சொன்ன அதே ஆதாரங் களை வைத்து, சந்திராசாமி யையும் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டுமென்று சொன்னேன். அவரால், நான் வைத்த ஆதாரங்களை மறுக்க முடியவில்லை. ஏற்கெனவே புலிக ளோடு தொடர்பில் இருந்த அதே சந்திராசாமி, இப்போது இலங்கை அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறார். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான ஒருவர், சமீபத் தில் சந்திராசாமியை டெல் லியில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் வைத்து சந்தித் திருக்கிறார். நான் கமிஷன் முன்பாகக் கொடுத்த வாக்குமூலம், கோவிந்தன் குட்டி என்பவர் எழுதிய 'இன்டிமேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் அப்போது வெளியாகி இருந்த சுப்பிரமணியன் சுவாமி பற்றிய விவரங்கள் ஆகிய விஷயங்களை மத்திய அரசு தீவிர மாக விசாரிக்கவேண்டும் என்று ஜெயின் கமிஷன் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்புக் குழு, இன்றுவரை இது தொடர்பாக விசாரிக்கவே இல்லை.


இதுபற்றியெல்லாம் சிந்திக்காமல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனியும் அரசி யல் லாபம் மட்டுமே கருதி பேசிக்கொண்டிருந் தால் அவர்களைத் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம்'' சஎன்று எச்சரிக்கும் தொனியில் முடித்தார் வேலுச்சாமி.
- ஜூனியர் விகடனில் வேலுசாமி பேட்டி

Sunday, February 17, 2008

'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

வேலூர் தங்கக் கோவிலில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் 320 ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார். நாராயணி பீடத்தின் தலைவர் சக்தி அம்மாவின் சார்பில் மொத்தம் 320 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 207 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிதி உதவிகளை கருணாநிதி வழங்கினார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அன்பு என்பது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது. நான் அன்பு காட்டினால், அதைப்போல அன்பு காட்டப்படுகின்றவர் என்னிடம் அன்பு காட்டினால் அங்கே பரிமாறிக் கொள்ளப்படுகின்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. கருணை என்பது ஒருவர் கொடுப்பது, அவர் திரும்பப் பெறுவதில்லை. திரும்ப தராத நிலையில் ஒருவர் பெற்றுக் கொள்வது, அது கருணை.

இங்கே எனக்கும், இந்த பீடத்தினுடைய அதிபருக்கும் இடையிலே இருப்பது அன்பு. நான் அவரிடத்திலே அன்பு காட்டுகிறேன். அவரும் என்னிடத்திலே அன்பு காட்டுகிறார். நான் அன்பு காட்டுவதற்கு காரணம் அவர் ஏழை-எளிய, நலிந்த மக்கள் இடத்திலே கருணை காட்டுகிறார். இப்போது அன்புக்கும், கருணைக்குமுள்ள வேறுபாடு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

அதனால்தான் மூன்றாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தபோது அருள்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை அழைத்து ஏழை குழந்தைகளுக்காக, ஆலயங்கள் பராமரிப்பில் கருணை இல்லங்களைத் தொடங்கினேன். முதல் முதல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அந்த இல்லம் தொடங்கப்பட்டது. அப்போது வாரியார் தான் அந்த இல்லத்திற்கு கருணை இல்லம் என்று பெயர் சூட்டினார்.

பல ஆலயங்களிலே அந்த கருணை இல்லங்கள் உருவாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.
அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களின் காரணமாக அந்த கருணை இல்லங்கள் பல இடங்களில் சரியாக செயல்படவில்லை. அதனை அறநிலையத்துறை அமைச்சரிடத்திலே சொல்லியிருக்கிறேன். அவர் கவனிப்பதாகச் சொன்னார். கவனித்திருப்பார் என்று நம்புகிறேன்.

இன்றைய தினம் இந்த இடத்திலே 320 நலிந்த குடும்பங்களைச் சார்ந்த சிறார்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது என்பதும், அதற்காக அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது என்பதும் சாதாரணமான விஷயமல்ல.

நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.

நாங்கள் இப்போது 5வது முறையாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கும் நிலையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். நலிந்த குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு இதய நோய் வந்தால், அவர்களைக் காப்பாற்ற என்ன அளவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவக் குழு மூலம் அறிந்து, சாதாரண சிகிச்சை போதுமா, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா என்பதை அறிந்து அதற்குத் தேவையான நிதியாக ரூ.10,000 முதல் ரூ.70,000 வரை தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. அந்த தேவையை நிறைவு செய்கிற-நாமெல்லாம் எண்ணி மகிழ்கின்ற நல்ல காரியத்தை இந்தப் பீடத்தின் அதிபர், இளமையிலேயே துறவு கோலம் பூண்டு, இளமையிலேயே ஆன்மிகப் பற்றாளராக மாறி இன்றைக்கு அந்த தொண்டினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

இங்கு பேசிய சிலர் ஆன்மிகம்-அறிவு என்ற இரண்டையும் இணைத்துப் பேசினார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகம், அறிவு இரண்டும் இரட்டைக் குழந்தைகள். அதிலே எந்த விதமான வேறுபாடும் இல்லை.

இரட்டைக் குழந்தைகளே தவிர, ஒட்டிப் பிறந்த குழந்தைகள் இல்லை. தனித்தனியான குழந்தைகள்தான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள். ஒன்று ஆன்மிகம்-ஒன்று அறிவியக்கம். ஆன்மிகத் துறை, அறிவியக்கத் துறை என்ற இரண்டு துறைகளும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்ளக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், ஒன்றுமே செயல்பட முடியாமல் போய் விடும். ஏதாவது செயல்பட வேண்டுமேயானால் இரண்டும் தனித்தனியாக இருந்தால் தான் செயல்பட முடியும். அதனால் தான் சென்னையிலே அண்ணா அறிவாலயம் இருக்கிறது, வேலூரில் இந்த தங்கக் கோயில் இருக்கிறது.

இரண்டும் தனித் தனியாக இருந்து மக்களுக்கு, ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

நாராயணி பீடத்திற்கு கருணாநிதி வருகிறானே என்று சில பேர் மகிழ்ச்சி அடைவார்கள், சில பேர் கேள்விக்குறி ஆவார்கள், சில பேர் அதிர்ச்சி அடைவார்கள் என்றெல்லாம் நம்முடைய அடிகளார் சொன்னார், பரவாயில்லை. அவர் உலகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறாரோ இல்லையோ, தமிழ்நாட்டை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறார்.

அதிலும் தமிழ்நாட்டு அரசியலை நேர்த்தியாகப் புரிந்து வைத்திருக்கிறார், அதிலும் இந்த 32 வயதிலே என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாராயணி என்பதாலேயே நான்-நாராயணியின் உருவத்திலே இருக்கின்ற கடவுளை ஏற்றுக்கொண்டேன் என்பதல்ல. பல மடாதிபதிகள், பண்டார சன்னதிகள், துறவிகள் இவர்கள் எல்லாம் கலந்து கொண்ட ஒரு மாநாடு சென்னையில் கற்பகாம்பாள் மண்டபத்தில் 1970ம் ஆண்டு வாக்கில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் முதல், சாந்தலிங்க அடிகளார் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதில் நான் பேசும்போது குறிப்பிட்டேன். கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறானா என்பதல்ல பிரச்சினை. கடவுள் கருணாநிதியை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு, அவன் கடமை ஆற்றுகிறானா என்பது தான் பிரச்சினை.

பிரச்சினை கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது தான். கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன, 300 கோடிக்கு மேல் மக்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே ஒரு கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், கடவுள் என்ன அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய் விடுமா?. அந்த ஓட்டெடுப்பு எல்லாம் தேவையில்லை.

நாம் நமக்கு நல்ல உள்ளத்தோடு, நம்முடைய காரியங்களைச் செய்தால் அது தான் கடவுள். உண்மை ஒன்றே தெய்வம் என்று பாரதி பாடினார். ராமலிங்க அடிகளும் அதைத்தான் சொன்னார். 'அருட் பெருஞ்சோதி, தனிப் பெருங்கருணை' என்று மொழிந்த வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார், அறிவு ஒளியைத் தான், உண்மை ஒளியைத் தான் தெய்வம் என்றார்.

'நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே, சுத்தி வந்து மொண மொண வென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்' என்றார் சிவ வாக்கியர். அவரை சித்தர் என்கிறோம், ஆனால் அதை நாங்கள் எடுத்துச் சொன்னால், எங்களை பித்தர் என்கிறார்கள்.

இதைப் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் எடுத்துக் காட்டுகிறேன். நல்லவைகளைச் செய்யும்போது, அவர்கள் நாத்திகர்களா, ஆத்திகர்களா, அவர்கள் செய்கின்ற காரியம் என்ன என்பதில் தான் நாம் முனைப்பாக கருத்து செலுத்த வேண்டும்.

அந்த வகையிலே தான் நாராயணியை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்றால், இப்படி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒவ்வொரு நாளும் காலையில் யோகா வகுப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். தேசிகாச்சாரி என்று ஒரு பிரபலமானவர் எனக்கு யோகா சொல்லித் தருகிறார். அவருடைய தந்தையும் யோகா ஆசிரியர். அவர் யோகா ஆசிரியராக இருந்த காரணத்தால் 102 வயது வரையிலே வாழ்ந்தவர். அந்த ஆசையிலே நான் யோகா கற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்காக உழைக்க உடலில் வலு இருக்க வேண்டுமே என்பதற்காக யோகா கற்றுக் கொள்கிறேன்.

கற்றுக்கொடுக்கின்ற தேசிகாச்சாரியார் முதல் நாள் எனக்கு பாடம் சொல்லும் போது, இரண்டு கைகளையும் உயர்த்தி, தாழ்த்தி, இப்படி இப்படி அசைத்து, பயிற்சி பெற வேண்டுமென்று சொல்லும்போது, அவர் சொல்லிக் கொடுத்த வாக்கியம் 'நாராயண நமஹ, நாராயண நமஹ' என்பதாகும். ஆனால், அதைச் சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது.

'ஏங்க, நாராயண நமஹ என்று தான் சொல்ல வேண்டுமா? நாராயண நமஹ என்றால் என்ன? என்றேன்.

ஒன்றும் இல்லீங்க, சூரிய நமஸ்காரம் என்றார்.

நானும் சூரிய நமஸ்காரம் பண்ணுகிறவன் தானே, எனக்கும் சூரியனை மிகவும் பிடிக்குமே, நாராயண நமஹவுக்கு பதிலாக ஞாயிறு போற்றுதும் என்று சொல்கிறேனே என்றேன்.

சரி, சொல்லுங்கோ என்றார். அவ்வளவு தான், தினந்தோறும் காலையிலே யோகா வகுப்பு நடக்கும்போது, அந்த பயிற்சிக்கு நான் சொல்கிற வாசகம், 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்பது தான்.

இப்போது, தேசிகாச்சாரியாரும் இதைத் தான் சொல்லி வருகிறார் என்பது வேறு விஷயம்.

எனக்கு பிடித்ததை நான் சொல்கிறேன், அவருக்கு பிடித்ததை அவர் சொல்கிறார்-இரண்டும் ஒரே விளைவு தான். இரண்டும் ஒன்று தான். ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் அப்போது இரண்டும் ஒன்றில்லை. அதனால் தான் சொல்கிறேன்.

அன்பு, பரிமாறிக் கொள்ளக் கூடியது, கருணை ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்ளக் கூடியது. அன்புக்கும், கருணைக்கும் வேறுபாடு தெரிந்து நடைபெறுகிற இந்த அருமையான ஆலயத்தில் இந்த இனிய வரவேற்பைப் பெற்றமைக்காகவும், இந்த வரவேற்பைத் தருவதற்கு நம்முடைய அடிகளார் அவர்கள் முன் வந்ததற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை தம்பி துரைமுருகனைப் போன்றவர்கள் செய்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Sunday, February 10, 2008

‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?


‘அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாய மல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல’ என்கிறீர்களே. எப்படி?

‘‘மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடிகோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) ‘ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ் வளவு பணம் வேண்டும்?’ என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து ‘நூறுகோடி தேவைப்படும்’ என்றார். ‘சரி பார்க்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ்ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்ட மன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒருகாலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989_ம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ்ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜானியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி ‘நான் லண்டன் போய் வரட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம். ஜானி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்’ என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ‘ஒரு கொலையை’ மட்டும் வைத்துக் கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?’’

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய _ இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

‘‘அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், ‘ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்’ என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்தநிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய _ இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29_ம்தேதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2_ம்தேதி ஒரு பாராட்டுவிழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31_ம்தேதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை ஐந்து மணியளவில் ராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. ‘அமெரிக்காவுக்குப் போகக் கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டதால் வேறுவழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ்காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ்காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய ராணுவத்தால் ஈழப்பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ்காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாதகுறையாக முறையிட்டார். அதற்கு ராஜீவ்காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.’’

அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

‘‘நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்ஸே, அவனது கையில், ‘இஸ்மாயில்’ என்று பச்சை குத்திக் கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்ஸேவின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில¢ திறந்ததே. அதை காங்கிரஸால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்பட வில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரஸாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திராகாந்தி படுகொலையின் போது பறிக்கப் பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, ‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?’ என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. ‘நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு’ என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ்காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?’’

ஒரு காலகட்டத்தில் ராஜீவ்காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

‘‘உண்மைதான் அது. இந்திய ராணுவம் புதை மணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ்காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?’ என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். ‘அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்’ என்று வருத்தப்பட்டார்.

‘சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?’ என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். ‘இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து ‘மிழீழத் தாயகம்’ என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள ராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறுகோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டுநாள் கழித்து ஒருநாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் ரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால¢ ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது.’’

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரஸார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

‘‘பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப்புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்தபூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.’’

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் புலமைப்பித்தன் பேட்டி

Friday, February 1, 2008

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!


ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!


“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?


பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.


‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.


அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.


இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.


பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.


தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.


தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.


தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.


தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.


பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.




இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.


இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.


“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .


என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!


“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”


பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!


தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்
கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.


“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.


“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.


ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!


பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)


தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.


தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.



அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.


தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.


இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)

Thursday, January 31, 2008

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு - தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் - வானநூல். கணியின் - வான நூல் வல்லவன். கணியர் - சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள.

கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி - சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர். சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் - இன்று பக்கம் என்பதையே - பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர்.

இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர்(தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா - காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.மேஷம் என்பதற்கு - முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி - யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும்.

சித்திரை முதல்நாள் - இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு

முத்தமிழ்ப் பேரவை விழாவில் முதல்வர் கலைஞர் உரை

சென்னை, ஜன. 30- தைத்திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத் தாண்டு என்று சட்ட ரீதியாகத் தொடங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; வட மொழிச் சொற்கள் கொண்ட 60 ஆண்டுகள் நம்முடைய காலக் கணிப்புக்குப் பயன் படாது என்று தமிழக முதல் வர் கலைஞர் குறிப்பிட்டார்.சென்னையில் நேற்று நடை பெற்ற முத்தமிழ்ப் பேரவையில் 32 ஆம் ஆண்டு இசை விழா வில் அவர் பேசும்போது இவ் வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:இதை நாங்கள் தமிழ் ஆண் டாக ஒத்துக் கொள்ள முடி யாது என்று சிலர் பத்திரிகை களிலே எழுதி இருக்கிறார்கள்; சிலர் முதல்நாளே கூட மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். சொன்னவர் யாரென்றால் ஒரு மலையாளி என்றால் சரி, ஒரு தெலுங்கர் என்றால் சரி, ஒரு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றால் சரி, ஒரு இந்திக்காரர் என்றால் சரி, சொன்னவர் ஒரு தமிழரேதான். தமிழர் என்று தான் ஒத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களே கூட இது தமிழ் ஆண்டு ஆகாது. ஏற்கனவே நமக்கு அறுபதாண்டுகள் இருக்கின் றன. அதையே பின் பற்றலாம் என்று எழுதுகின்றவர்கள், சொல்லுகின்றவர்கள் உண்டு.

திராவிடர் கழகத்தாருடைய பிரச்சார அடிப்படையிலே இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் வாயி லாக எடுத்துச் சொன்ன கருத் துக்களின் அடிப்படையில் நான் சொல்லவில்லை. நமக்கு இருக்கின்ற அறிவு, சிந்தனை அதைக் கொண்டு செய்யக் கூடிய ஆராய்ச்சி இதன் அடிப் படையில சீர்தூக்கிப் பார்த் தால், இந்த 60 ஆண்டுகள் என்ற வடமொழிச் சொற் களைக் கொண்ட இந்த ஆண் டுகள் நம்முடைய வாழ்க் கைக்கு காலக் கணிப்புக்குப் பயன்படுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.அறுபதாண்டுகளில் - பிர பவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிராஜேர்பத்தி, ஆங்கிரச, சிறீ முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக் கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்தீப, சர் வஜித்து விஜய, ஜய, மன்மதன, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி என்று தொடர்ந்து குரோதன, அட்சய என்று முடிகிறது. சரி, இந்த அறுபதாண்டு என்ற கணக்கு எப்படி என்றால் - நார தருக்கும் மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணத்திலே இருக்கிறது. நாம் ஒத்துக் கொண்டுதான் தீர வேண்டும். ஏனென்றால் புரா ணத்திலே இருப்பதால் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை சரித்திரத்திலே இருந் தால் ஒத்துக் கொள்ளத் தேவை யில்லை. இருவருக்கும் ஒரு வித மாக விபரீதமான ஆசை ஏற் பட்டது. நாம் இருவரும் ஆணும் பெண்ணுமாக மாறி, ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்று எண் ணினார்கள்! எண்ணியது தெய் வங்கள் அல்லவா? ஆகவே எண்ணியது நிறைவேறியது. அப்படி பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந் தைகள் தான் நான் இப்போது சொன்னேனே, இந்தப் பெய ருக்கு உரிய குழந்தைகள்.சரி, அது வரையில் ஒத்துக் கொள்வோம்.

ஆனால் நம்மு டைய வயதுக் கணக்குக்கு, அல் லது காலக் கணக்குக்கு அந்தக் கதை ஒத்து வருமா? அதைப் பின்பற்ற முடியுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மண்டபம் இருக்கின்ற இடம் சாதாரண மான இடமல்ல. சிந்திக்கத் தெரிந்தவர்கள் உள்ள பகுதி இது. எதையும் ஏன், எப்படி என்று தங்களுக்குள்ளாகவே கேட்டு விடை காணக் கூடிய வர்கள் நிறைந்த பகுதி இது. பொதுவாகச் சொன்னால் நிரம்பப் படித்தவர்கள் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியாக இருக் கின்ற காரணத்தால் இங்கி ருந்து அவர்களுக்கு இந்தச் செய்தி போகாவிட்டாலும், காலையிலே அவர்கள் இதை உணர முடியும் என்பதற்காகச் சொல்லுகிறேன்.

இந்த அறுப தாண்டுகள் கணக்கு - காலக் கணக்குக்கு ஒத்து வராது. எப் போது ஒத்து வருமென்றால், மனிதனின் சராசரி வயது, அந்தக் காலத்துத் தமிழனு டைய சராசரி வயது, முப்பது, நாற்பது என்றிருந்தபோது வேண்டுமானால் ஒத்துவரலாம். இப்போது 84 அய்யும் தாண்டி விட்டேன். இப்போது எப்படி அறுபதாண்டுகள் கணக்கு ஒத்து வரமுடியும். என்னைப் பொறுத்த வரையில் நான் பிறந்த ஆண்டு இப்போதுள்ள வருடக் கணக்கின்படி ரக் தாட்சி ஆண்டு, ரக்தாட்சி ஆண்டு அந்த அறுபதில் 58 வது ஆண்டு. ரக்தாட்சி, குரோதன அட்சய என்பதோடு அறுப தாண்டுகள் முடிகிறது. சரி, இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் சென்று என்னை தம்பி பாரதிராஜா போன்றவர் கள் பார்த்து நீங்கள் எந்த வருஷம் பிறந்தீர்கள், வயது என்ன என்று கேட்டால், நான் ரக்தாட்சி வருஷம் பிறந்தேன் என்று சொன்னால் அப்படி யென்றால் உங்களுக்கு வயது இரண்டு தான் ஆகிறதா? என்று கேட்பார்கள்.

எனவே ஒழுங்கான கணக்கு, சரியான கணக்கு, வருஷக் கணக்கானாலும் சரி, வயதுக் கணக்கானாலும் சரி, எந்தக் காலக் கணக்கானாலும் சரி, அது கணக்காக இருக்க முடியாது. ஆகவேதான் அந்த வட மொழி என்ற எழுத்தின் மீதுள்ள வெறுப்பால் அல்ல. அந்தக் கணக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதை நாம் விலக்கி வைக்க வேண்டி யிருக்கின்றது. அதனால்தான் தொடர்ச்சியான எண்கள் - நாம் நம்முடைய பண்பாட்டிற் கேற்ப - எப்படி ஆங்கிலேயர் கள் கிறிஸ்து பிறந்த ஆண்டு அதற்குப் பிறகு, அதற்கு முன்பு என்று வைத்திருக்கிறார்களோ, அதைப் போல நமக்கு யார்? நமக்கு யார் கிறிஸ்து? நமக்கு யார் நபி? நமக்கு யார் சிவனோ, பார்வதியோ, சைவர்கள் கணக் கின்படி பார்த்தாலும், அல்லது வேறு எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் திருவள்ளுவர் தான் நமக்கு காலக் கணக்கு.

திருவள்ளுவருக்கு முன், திரு வள்ளுவருக்குப் பின் என்ற இந்தக் கணக்கை எடுத்துத் தான் சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் யெரிலே இருந்த பெரும்புலவர் - பல புலவர் களுக்கெல்லாம் வழிகாட்டி யாக இருந்தவர் - இன்று தமிழர்களுடைய தன் மான உணர்வுக்கு அன்றைக்கு வித் திட்டவர் - தண்ணீர் பாய்ச்சி யவர். அந்த சாமி வேதாசலம் - தன்னுடைய பெயரை சாமி வேதாசலம் என்பதை, மறை மலை அடிகளார் என்று மாற் றிக் கொண்டு, தான் மாற்றிக் கொண்டால் மாத்திரம் போதா தென்று ஆண்டுகள் கணக்கை யும் மாற்றி, இனி தமிழனுடைய கலை, கலாச்சாரம் எல்லாம் தமிழிலேயே மாற வேண்டு மென்கின்ற அந்த மாற்றத் தையும் செய்த மாமனிதர்தான், மறைமலை அடிகளார்.அதனால்தான் 1967 இல் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா முதலமைச்சர், நான் பொதுப் பணித்துறை அமைச்சர். அப் போது சைதாப்பேட்டையிலே இருந்த பாலத்திற்கு - அது கட்டப்பட்ட நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டதும், நான் எழு திக் கொடுத்த பெயர் மறை மலை அடிகள் பாலம் என்ப தாகும்.

இப்படி நம்முடைய மனதிலே ஆழப் பதிந்திருக்கிற ஒரு சொல். ஒரு பெயர் மறை மலை அடிகள். அவரால் சொல்லப்பட்ட கருத்துத்தான் எடுத்துச் சொல்லப்பட்ட புதை யல்தான் - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆரம்பமா கிறது என்பது. எனவேதான் சொன்னேன். நம்முடைய சாரதா நம்பி ஆரூரான் அதற் காக வருத்தப்படத் தேவை யில்லை. நாம் பேசியிருந்தால் நம்முடைய தாத்தா பெயரை இவ்வளவு நேரம் அவர் சொல் லியிருப்பாரா என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம் என்பதை மாத்திரம் அவர்களுக்குக் கூறிக் கொள் கிறேன்.- இவ்வாறு முதல்வர் கலை ஞர் அவர்கள் உரையாற்றினார்.

Tuesday, January 29, 2008

நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி

ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.ஆதி என்கிற என் நண்பனின் நூலும் அதில் ஒன்று. அவரது அழைப்புதான் என்னை அங்கே அழைத்துச் சென்றது.

பார்வையாளனாக இருந்த என்னை.. அண்ணன் வண்ணநிலவன் அவர்கள் வராத வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம். அண்ணன் கல்யாண்ஜி அவர்களின் ஒலிக்கவிதைகள் வெளியீட்டாளனாக மேடைக்கு என்னை அழைத்துச் சென்றது.

மேடையில், தங்கைகள் கனிமொழி, தமிழச்சி, குஷ்பு, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். தம்பிகள் அய்யனார், இராம். ஆனந்த்தராசன் மேடையில் இருந்தனர்.

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு முடிந்து, கல்யாண்ஜி அண்ணன் பற்றி நான்பேசி. அண்ணன் பேசி. தமிழச்சி பேசச் சென்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள் அரங்கிற்குள் நுழைய, அவரது இயக்கத்தினர் வாழ்த்துக் குரல் எழுப்ப, தங்கை கனிமொழி, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி... இருக்கையில் அவரையும் அமரச் சொல்லி அமர்ந்தோம். அவர் வருவது தெரிந்ததும்.. முகத்தைச் சட்டென திருப்பிக் கொண்டு.. தமிழச்சியின் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தார் குஷ்பு.

இருவரும் இந்தச் சந்திப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு குஷ்புவின் அந்தப் பாவனை அருவருப்பை ஊட்டியது. திரும்பி வணக்கம் சொல்லிவிட்டால்.. தானும் வணக்கம் சொல்லவேண்டும் என்கிற மனோநிலையில், தலைவர் திருமாவளவன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார். குஷ்பு திரும்பவே இல்லை. அந்த நேரத்து திருமா அவர்களின் உளவியல் மனவலி என்னை அறுத்தது.தங்கை தமிழச்சிக்குப் பிறகு. குஷ்பு அவர்கள் பேசச் சென்றார். தான் வெளியிட்ட நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசியதைவிட.. கடந்த ஆண்டில் அவர் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியே அதிகமாகப் பேசினார். பேச்சுக்கு இடையே, தோழர் திருமாவளவன் அவர்கள் இருக்கிற மேடையிலேயே நானும் நிற்கிறேன். இதில் நான் வெற்றிபெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன் என்று கர்வமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு அவர் பேசியதுதான் தங்கை கனிமொழி நக்கீரனில் சொல்லியிருப்பதைப் போல அநாகரிகத்தின் உச்சகட்டமாக இருந்தது. ''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...''தோழர் திருமா.. வணக்கம்'' என்று கூறிய முறை இருக்கிறதே... அது தலைவர் திருமாவை மட்டுமன்று... ஒட்டுமொத்தத் தமிழர்களையே. தன் காலுக்குக் கீழ்போட்டு மேல் நிற்பதான மமதையில் கூறியதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, உலகத் தமிழர்களின் நல்லெண்ணமாக வளரும் தலைவர் திருமாவளவன் அவர்கள் வந்தபோது, குஷ்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது குறித்தோ, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது குறித்தோ, இங்கு கவலையில்லை.


அதுதான் அவருக்கு அவரது மனம் கற்றுக் கொடுத்த நாகரிகம் என்று விட்டுவிட்டோம். திரும்பிப் பார்க்காத அதே உறுதியில், வணக்கம் வைக்காத அதே திமிரில், மேடையில் வெளியிட்ட நூல்பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசாமல் எல்லாவற்றையும் மறந்து பெருந்தன்மையோடு மேடைக்கு வந்திருக்கும் ஒரு தலைவரை, வம்புக்கு இழுத்து வணக்கத்தைப் பிச்சை போடுவது போல் போட்டு, போட்டதோடு நில்லாமல், போடாவிட்டால் வழக்கு போடுவீர்கள் என்று, நக்கலான ஒரு சொல்லால் தலைவர் திருமாவை, தலைவர் திருமாவின் தலைமையின் கீழ் இயங்கும் இயக்கத்தை, அவரின் மீது உயிரையே வைத்திருக்கும் இலட்சோப இலட்சம் மக்களை ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையே இழிவு செய்த அந்த அநாகரிகச் செயல்தான் என்னைச் சடக்கென எழவைத்து கண்ணுக்கெதிரே நடக்கும் மனித நேயமற்ற இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டியது.

தன்னைத் தமிழ்நாட்டின் கருத்துருவாக்கத் தலைவியாய் ஆக்கிக் காட்டுவதாக உறுதி கொடுத்தவர்களின் முன் ஒரு முறைக்குப் பலமுறையாக ஒத்திகை பார்த்த பிறகு இங்கு வந்து அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே அவரது உரையாடல்களும், உடல் மொழிகளும் அமைந்திருந்தன. அவை, நம் தமிழனத்திற்கான மிகப்பெரிய ஆபத்துகளாக அமைவன என்பதையும் உளவியல் ரீதியாக உணர்ந்தே மேடைக்கு உந்தப்பட்டேன். தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்திவிட்ட திருப்தியில், எழுந்துபோக முயன்றவரை, அமருங்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, பேசத் தொடங்கினேன்.

இலக்கிய விழாவை இலக்கிய விழாவாகவே நடத்த வேண்டும் என்கிற நாகரிகத்தோடு நாங்கள் அனைவரும் பேசினோம். நீங்கள் அந்த மரபைவிட்டு வெளியே போய் அரசியல் பேசியதால்தான் நாங்களும் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன். அவரை வென்றுவிட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் என்ன போரா நடந்தது?அதோடு இல்லாமல், தேவையில்லாமல் அவர் வருகிறபோது, சராசரி மனிதப் பண்பாடு கூட இல்லாமல் அவமரியாதை செய்துவிட்டு,. அதற்குப் பிறகு அவரைக் கூப்பிட்டு, இந்தா வணக்கம். என்று கேவலப்படுத்துகிற உரிமையை உங்களுக்கு யார் தந்தது?


அப்படித்தான். பெரியார் திரைப்பட நூறாவது நாள் விழாவில், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவில் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன் என்று அழுது வழிந்தீர்கள்.அதற்கு முன்னதாக. செயா தொலைக்காட்சியில் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியில், நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கர் பச்சானைப் பற்றியே பேசிவிட்டு, இறுதியாக நீங்கள் இயக்கும் படத்திற்குத் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று உங்கள் தயாரிப்பாளர் கேட்டால், அதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்?Who are you? அவன் யார்? என்று கேட்டீர்கள்.ஏன் இப்படி, முரண்பாட்டின் முட்டையாக இருக்கிறீர்கள்?அவன் யார் என்கிறீர்கள்.அப்புறம்அவர் ஒளிப்பதிவில் நடிக்க முடியாததற்காக வருத்தப்படுகிறேன் என்கிறீர்கள்.

எங்கள் தலைவர் வருகிறபோது வணக்கம் வைக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்புறம் மேடைக்கு வந்து, வழக்கு போடுவீர்கள் என்பதற்காக வணக்கம் வைக்கிறேன் என்கிறீர்கள்.எங்கெங்கிருந்தோ பிழைக்க வந்தவர்களெல்லாம், இப்படி எங்கள் கலைஞர்களை, தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் கேலி பேசலாம். நக்கல் செய்யலாம். அவமானப் படுத்தலாம் என்கிற நிலையை எப்படி பொறுத்துக் கொள்வது? இந்த தமிழினம் ஏன் இப்படி அவலங்களுக்கு ஆளாகிறது?என்று என் ஆதங்கங்களைப் பதிவு செய்து, என் தம்பியின் மனைவி என்கிற முறையில் கூறுகிறேன். கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதே நேரத்தில், எம் தலைவரை எம் இனத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தேன்.

அதற்குப் பிறகுதான் குஷ்பு எழுந்து சாமியாடத் தொடங்கினார். இதெல்லாம் கேக்கறீங்க, எங்கருத்துக்கு என்ன சொல்றீங்க? அன்னைக்கு நான் வச்ச அந்தக் கருத்துக்கு என்ன சொல்றீங்க?என்று ஆவேசப்பட்டு பேச...பார்வையாளர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க..தலைவர் திருமா சென்று, குஷ்பு அவர்களைக் கொஞ்சம் ஒதுங்குங்கள், நான் பேசுகிறேன் என்று கூறி, தோழர்களை ஒற்றைச் சொல்லிலேயே அமைதிப்படுத்தி பேசத் தொடங்கினார்.

அவரது பேச்சிலும், உங்களின் கருத்துரிமையைப் பறிக்கும் உரிமை எங்களுக்கில்லை, அதே நேரத்தில் எங்களை புண்படுத்தும் உரிமையும் உங்களுக்கில்லை. ஒரு கருத்தை வைக்கும்போது அந்த இன மக்களின் மனநிலை உணர்ந்து பேசவேண்டும். அப்படிப் பேசாமல்...யார் இங்கே யோக்கியர்கள் என்று நீங்கள் பேசிய அந்தச் சொல்தான் மக்களைத் தன்னெழுச்சியாய் ஆத்திரப்பட வைத்தது. மற்றப்படி நாங்கள் பெண்களுக்கோ பெண்ணுரிமைக்கோ எதிரானவர்களல்ல.நாங்கள் பெரியாரின், அம்பேத்கரின் பிள்ளைகள் என்று பேசி முடித்தார்.


பேசி முடித்ததும், சமாதான முறையில் மறுபடியும் படம் எடுத்துக் கொண்டு, கூட்டம் கலைந்தது.ஆம். இதுதான் நடந்தது. இந்த இடத்தில், அறிவுமதியாகிய நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு.க. பிறந்த 1949-இல்தான் நானும் பிறந்தேன். கொள்கையில் கற்பு கெடாத ஒரு தி.மு.க. செயலாளருக்கு மகனாகப் பிறந்தேன். எம் இனத்திற்குஎம் மொழிக்குஓர் இடர் வந்தால்... எதிர்த்து நில்என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது...திராவிட இயக்கம்.தந்தை பெரியார்தலைவர் கலைஞர்.

அய்ந்து வயதுக்கு முன்னதாகவே, ஒரு சீர்திருத்தத் திருமண நாளன்று, தி.மு.க. கொடியேற்றும்போது நிறுத்துங்கள் சிவப்பு மேலே இருக்கிறது கறுப்பை மேலே வைத்துக் கட்டுங்கள் என்று சொன்னவன் நான். கலைஞர் கவிஞரே இல்லை என்று ஓர் எழுத்தாளர் எகத்தாளமாய் எழுதியபோது கொதித்து மறுப்புச் சொன்ன ஒரே பிள்ளை நான். இருவர் படத்தில் எம் தங்கையின் அம்மா அப்பாவை மணிரத்னம் கொச்சை செய்தபோது வலிவாங்கி எதிர்த்த ஒரே அண்ணன் நான். வயது சொல்லி எம் தலைவரை பார்ப்பணியம் ஓவ்வெடுக்கச் சொன்னபோது ஓங்கிக் குரல் கொடுத்தத் தொண்டன் நான்.

அப்படித்தான் என் கண்முன்பாகவே எம் உயிருக்குயிராக நேசிக்கும் தலைவர் திருமாவை ஒருவர் அவமானப்படுத்துகிறபோது பொறுத்துக்கொள்ள இயலாமல் போய் பதில் சொன்னேன். எம் அன்பான ஊடகங்களே! என் அன்பான உறவுகளே!இப்படிப்போய் எம் தலைவர் திருமாவின் வலிவாங்கி நான் பதில் சொன்னது நாகரிகமற்ற செயல் என்றால் மன்னியுங்கள். அந்த நாகரிகமற்ற செயலை நான் செய்து கொண்டேதான் இருப்பேன். இறுதிவரை பெரியாரின், அம்பேத்காரின் பிள்ளையாகவே இருப்பேன். இறுதிவரை கைநாட்டு மரபிலிருந்து எம்மைக் கையெழுத்து மரபிற்கு அழைத்து வந்த திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். என்றும் எந்தக் குறுகிற வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன். நான்.. உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை!

--நக்கீரனில் அறிவுமதி