Sunday, November 25, 2007

தமிழ் ஈழம் - குமுதத்தின் உருப்படியான கட்டுரை

விடுதலைப் புலிகளைக் கொண்டு விரும்பத்தகாத அரசியல் சர்ச்சைகள் தமிழக அரசியலில் அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்செல்வன் அவரது சமாதானச் செயலகத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை அரசால் குண்டுவீசிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘இரங்கற்பா...’ அவரை, ‘ஆட்சியை விட்டு இறங்கப்பா...’ என்ற அளவுக்கு ஆவேச அலைகளை உருவாக்கி உள்ளது.

‘கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்.’‘இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்’ என்கிறார் ஜெயலலிதா. ‘‘விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். இதற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அது தேசவிரோதமாகும்’’ என்றும் கூறுகிறார் ஜெயலலிதா. எனில், விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோ எப்படி அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்? எனக் கேட்டால், ‘‘கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படுவது’’ என்கிறார். அப்படியானால் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்காக தேசத் துரோகத்தை ஜெயலலிதா மன்னித்து மறந்துவிடுவார் போலும்!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு மனநிலை கொண்டிருப்பதும், எதிர்ப்பு மனநிலை கொண்டிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அந்த மனநிலை சார்ந்து இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படாதவரை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது.

ஜனநாயக நாட்டில் எவருக்குமுள்ள கருத்துச் சுதந்திரத்தை, எந்தப் பூச்சாண்டியைக் காட்டியும் பறிக்க முயல்வது தீவிரவாதத்தையும் மிஞ்சிய தீவிரவாதமாகவே அர்த்தப்படும்.

ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணில் கொன்று சாய்த்த விடுதலைப்புலிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது, மறக்காது என்கிறார்கள் தமிழக காங்கிரஸார்.

ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் தாக்க முயன்ற விஜயமுனி என்ற சிங்களச் சிப்பாய் இன்று இலங்கையில் அரசியல் அந்தஸ்து பெற்ற முக்கியஸ்தராக வலம் வருகிறார்.

இப்படிப்பட்ட இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை (ஐ.என்.எஸ்.சரன்யூ, சி.ஜி.எஸ்.வார்த்தா) இந்தியா இலவசமாக தந்தபோது அதை இங்குள்ள காங்கிரஸார் தடுத்திருக்க வேண்டாமா?

தமிழகத்தின் மக்கள்தொகை யில் மூன்றில் ஒன்றேயுள்ள சின்னஞ்சிறிய இலங்கையின் ராணுவத்தினர் குருவி சுடுவது போல் தமிழக மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததற்கு அந்த அரசின் மீது மத்தியஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இப்போது, ‘‘கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா எங்களின் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்துவிட்டது’’ என்று குமுறும் காங்கிரஸாருக்கு இதற்கெல்லாம் சாதாரண கண்ணீர் கூட வராதா?

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தியை ஆர்.எஸ்.எஸ்.சின் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது. அந்தத் தடை சுமார் 16 மாதங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகக் கடுமையாக விமர்சித்தாரோ அதே ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகவும் மதித்து ‘இதன் அருமை பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியாது’ என்றார் ஜவஹர்லால் நேரு. 1963_ல் நடந்த குடியரசு தினவிழாவில் ஆர்.எஸ்.எஸ்.ஸை அரசுப் படைகளோடு அணிவகுக்கச் செய்து அழகு பார்த்தார் நேரு.

ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்ததுதான் விடுதலைப்புலிகள் செய்த பெருந்தவறு. ஆனால் அதற்கு முன்பும் சரி, பின்பும்சரி விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரியாகச் செயல்பட்டதில்லை.

இதன் மற்றொரு எதிர்வினையாக சிங்கள அரசு இந்திய அரசோடு நெருங்கவும், அதன் அத்துமீறிய மனித உரிமை மீறல்களை இந்திய அரசு அலட்சியப்படுத்தவுமான அவலம் நேர்ந்துவிட்டது.

ஆனால் இலங்கை அரசோ இந்தியாவிற்கு என்றுமே நம்பிக்கை நண்பனாக இருந்ததில்லை.

இலங்கை தீபகற்ப பகுதியை அமெரிக்காவின் ராணுவத்திற்கு தாரைவார்த்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தந்ததால்தான் இந்திராகாந்தி விடுதலைப்புலிகளுக்கு இந்திய மண்ணில் பயிற்சி தந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை குறைந்தபட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு, இந்திராகாந்தியால் பரிந்துரைக்கப்பட்ட ‘அனெக்சர் சி’ திட்டத்தை அம்போவென்று கைவிட்டது இலங்கை அரசு.

ராஜீவ்காந்தி காலத்தில்அதைக் காட்டிலும் குறைவான உரிமை களை தமிழர்களுக்குத் தரும் அட்டர்னி ஜெனரல் பராசரனால் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்தவில்லை.

இப்போது இந்தியாவின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இந்தியாவுடன் பங்காளிச்சண்டை கொண்ட சீனாவுடனும், பகை கொண்ட பாகிஸ்தானோடும் இலங்கை ராணுவ உடன்படிக்கை செய்து கூடிக்குலவுகிறது.

இந்நிலையில், ‘சிங்கள அரசுக்கு ஒரு ‘செக்’ வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகளை பயன்படுத்திக்கொள்ளலாமா’ என்று கூட இந்தியா ராஜதந்திர ரீதியாக யோசிக்கலாம்.

விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கைப் பிரச்னையின் யதார்த்தங்களை பார்க்கவேண்டும். இந்தியாவைப் போல் இலங்கை மதச்சார்பற்ற நாடல்ல.

அது சிங்களபௌத்த நாடாக அதன் அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடாகும். அங்கே அதிபராகவோ, பிரதமராகவோ, முப்படைத் தளபதிகளில் ஒருவராகவோ தமிழர்கள் வருவதை நினைத்தும் பார்க்க முடியாது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் செனட் உறுப்பினரான ஹிலாரி கிளிண்டன் பிரிட்டனின் ‘தி கார்டியன்’ இதழுக்கு ‘‘இலங்கையின் விடுதலைப்புலி களையோ, ஸ்பெயினின் பாஸ்க் போராளி களையோ பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது’’ என பேட்டியளித்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கருணாநிதியின் ‘கண்ணீர் இறங்கற்பா’ என்பது இழந்து கொண்டிருக்கும் தமிழினத் தலைவர் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள எழுதப் பட்டிருக்கலாம். அதைப்பற்றிய கவலையை கருணாநிதிக்கே விட்டுவிடலாம். ஏனெனில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதில் இன்றுவரை கருணாநிதி இரண்டுங்கெட்டா னாகத்தான் இருக்கிறார். பெரும்பாலும் அவரது அரசியல் ஆதாயத்திற்குத் தக்கபடியே இந்த ஆதரவையும், எதிர்ப்பையும் முடிவு செய்கிறாரேயன்றி, இந்திய நலன்களையும், இலங்கைத்தமிழர் நலன்களையும் இணைத்து முடிவு எடுப்பவரல்ல கருணாநிதி.

ஆனால் அந்தப் பொறுப்பு காங்கிரஸாருக்கு இருக்கவேண்டும். இலங்கைப் பிரச்னையை வெறுமனே விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஜனநாயகத்திற்கு ஆபத் தானது, வறட்டுத்தனமானது, ஆரோக்கியமற்றது..

நன்றி: குமுதம்

Sunday, November 11, 2007

கடவுள் இருக்கிறாரா?-சிறுகதை

எனக்கு பிடித்த சில குட்டி கதைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

முதலில்,ஒரு வார இதழில் படித்த, கடவுள் நம்பிக்கை பற்றிய எனது எண்ணத்தையே மாற்றிய ஒரு கதையுடன் தொடங்குகிறேன்


"உண்மையாவே கடவுள் இருக்கிறாரப்பா? "அப்பாவிடம் கேட்டான் பையன்

"இந்த கேள்விக்கு பதில் நாளைக்கு சொல்றேன்ப்பா",என்றார் அப்பா

மறுநாள் பையனுக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அப்பா

பையன் சைக்கிள் ஓட்ட,பிடித்துகொண்டு பின்னாலேயே ஓடி வந்தார் அப்பா.
கொஞ்ச தூரம் போனதும் கையை விட்டுவிட்டு பிடிக்கிற பாவனை செய்துகொண்டே பின்னால் ஓடி வந்தார்

வீடு திரும்பும்போது அப்பா சொன்னார்,"பாத்தியாப்பா இன்னைக்கு நீ சைக்கிள் ஓட்டும் போது கொஞ்ச தூராம்தான் நான் பிடிச்சுகிட்டே வந்தேன்,அதுக்கப்புறம் சும்மா தான் ஓடி வந்தேன்.ஆனா நான் பிடிச்சிருக்கிறேன்ற நம்பிக்கைல நீ சைக்கிள் ஓட்ன பாத்தியா?,அதுமாதிரிதாம்ப்பா கடவுள் நம்பிக்கையும்".

"கடவுள் இருக்கிறாரா, இல்லையான்னு எனக்கும் தெரியாது,ஆனா மனுசன் வாழ்க்கையைல வர்ற கஷ்டங்களை,தடங்கல்களை நம்பிக்கையோட எதிர் கொள்ள கடவுள் நம்பிக்கை தேவைப்படுது.புரிஞ்சதா?"

பையன் கேட்டான் "ஆனா நானே தனியா சைக்கிள் ஓட்ட பழகுனதுக்கப்புறம் நீங்க சும்மா என் கூட ஓடி வர தேவையே இல்லையேப்பா?

பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் அப்பா.

இந்த கதை என்னை மிகவும் பாதிக்க காரணம்,இதை படிக்கும் போது அந்த அப்பாவின் மனநிலைதான் எனக்கும்.அந்த பையன் அப்பாவிடம் கேட்ட கேள்வி என்னிடம் கேட்ட மாதிரி இருந்தது

Sunday, November 4, 2007

"கிருஷ்ண"சாமியைக் காப்பாற்றியது ராமரா? முருகரா? - தினமலரின் மேதாவிக் கட்டுரை

உஷார்!

யாரைத்தான் நம்புவதோ?

இன்றைய தினமலரில் (04/11/07) வந்துள்ள "ஆராய்ச்சிக்" கட்டுரை.


08/11/2007 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணு பிரசாத் பேட்டி


இது தான் "தேசியத்" தமிழ் நாளிதழின் செய்திகளின் தரம்/இலட்சணம்.

செய்தியை செய்தியாய்த் தருவது என்பது வேறு. அதைப் பற்றிக் கட்டுரை, அதுவும் விஷமத்தனமான கட்டுரை ராமரைப் பற்றி எழுதும் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலே ஒரு Conclusion வேறு.

இது ஒரு சாம்பிள் தான். தினமலம் இது போல், செய்திகள் அலசல், கமெண்ட் என்று போட்டுக் கொண்டிருப்பவைகளுக்கும் ஒரு வெங்காய ஆதாரமும் இல்லை.

ஒரு வேளை தமிழ்க் கடவுள் முருகனின் "சக்தி"யை மறைத்து ஆரியக் கடவுளை தூக்கி விடும் பரம்பரை சதியோ? யார் கண்டது? :-)


Saturday, November 3, 2007

தியாகிகள் புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறார்கள்!


ஆறிலும் சாவு! நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்,
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.




எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

- கலைஞர் கருணாநிதி