Sunday, February 24, 2008

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியம்சாமிக்கு தொடர்பு?

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது என்றும், புலி ஆதரவு இயக் கங்களைத் தடைசெய்ய வேண்டும்என்றும் குரல் கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் தலை வர்கள் இந்தக் குரல்களுக்கு சொந்தக்காரர்கள். இன்னொரு பக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தி, 'ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன?' என்று வேறொரு கோணத்தில் பரபரப்பு கிளப்பும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார் திருச்சி வேலுச் சாமி. இவரும் ஒரு காங்கிரஸ்காரர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்!


அவரை சென்னையில் சந்தித்தோம். ''கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்த லில், 'தலைவர் ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கான பழி தமிழன் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த அவச்சொல் அகலவேண்டும் என்றால், இந்தியாவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்...' என்று பிரசாரம் செய்தேன். சோனியா காந்தி வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் அரசு அமைந்து, நான்கு ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்துவிட்டது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகாலத்தில் ராஜீவ் கொலைக்குக் காரணமானவர்கள் பற்றி ஒருநாளாவது காங்கிரஸ்காரர்கள் பேசியதில்லை. தி.மு.க. ஆட்சியை மிரட்ட வேண்டும் என்றால் மட்டும் புலிகளைப் பிடித்துக்கொள்கிறார்கள். இதைத்தான் நான் கண்டிக்கிறேன்'' என்றவர், சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா விஷயத்துக்கு வந்தார்.


''அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி எதிர்ப்புக் குரல் கொடுக் கிறார்கள். ஆனால் இதே சுவாமி, ராஜீவ்காந்தி கொலையான சில மாதங்களில் ஜெயலலிதாவைக் குற்றம்சாட்டியது பொய்யா? ஜெயின் கமிஷன் முன்பு சுவாமி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 'ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளோடு சேர்ந்து செயல்பட்டவர் ஜெயலலிதா. அதனால், ஜெயலலிதாவையும் குற்றவாளியாகக் கருத வேண் டும்...' என்று சொல்லியிருந்தார். அந்த அஃபிடவிட் மீது ஐந்து நாட்கள்விசாரணை நடந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்காகப் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடி, கமிஷன் முன்பு ஜெயலலிதா ஆஜராவதிலிருந்து விலக்குப் பெற்றார்.

அதேநேரம், நான் ஜெயின் கமிஷன் முன்பாக ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதில், 'ராஜீவ்காந்தி கொலை நடக்கப்போகும் விவரம், சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்பே தெரியும்...' என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தேன். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜெயின், விசாரணைக்கு சுவாமியை வரவழைத்தார். அப்போது, ராஜீவ்காந்தி கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பும் பின்பும் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் வீசப்பட்டன. நாங்கள் அப்போது சுவாமி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் ஆதரவாக இருந்தவர் ஜெயலலிதா. ஆக, ஒருவர் மீது ஒருவர் ராஜீவ்காந்தி கொலையில் மாறிமாறி குற்றச்சாட்டுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள், இப்போது ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுகிறார்கள்'' என்று கொதித்த வேலுச்சாமியிடம்,

''அதுசரி, காங்கிரஸ்காரர்களை ஏன் இதில் வம்புக்கு இழுக்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.


''மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அதில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் ராஜீவ் கொலை வழக்கைக் கவனிக் கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜெயின் கமிஷன் விசாரணையின்போது கொலை தொடர்பாகப் பெறப்பட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்தது. இறுதி யில் அந்த ஆவணங்களெல்லாம் காணாமல் போய் விட்டதாக சொல்லிவிட்டார்கள். ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது பதிவான வீடியோ ஆதாரம் ஒன்றை சி.பி.ஐ. கைப்பற்றியது. அதைத் தாக்கல் செய்த போது, சில காட்சிகளை யாரோ அழித்திருந்தது தெரிந் தது. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் ராஜீவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடி ஏற்பட்டதாக பல அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர் களில் பலருக்கும் காங்கிரஸ் அரசே பதவி உயர்வு அளித்தது. இவ்வளவுதான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் கொலையின் உண்மைகள் வெளியாவதில் இருந்த அக்கறை. ப.சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ எப்போதாவது இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருப்பார் களா? தங்களுக்கு அரசியல்ரீதியாக பேசுவதற்கு விஷயம் இல்லையென்றால், 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்...' என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.


ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு முன் கூட்டியே தகவல்கள் தெரியும் என்று சொன்ன அதே ஆதாரங் களை வைத்து, சந்திராசாமி யையும் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டுமென்று சொன்னேன். அவரால், நான் வைத்த ஆதாரங்களை மறுக்க முடியவில்லை. ஏற்கெனவே புலிக ளோடு தொடர்பில் இருந்த அதே சந்திராசாமி, இப்போது இலங்கை அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறார். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான ஒருவர், சமீபத் தில் சந்திராசாமியை டெல் லியில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் வைத்து சந்தித் திருக்கிறார். நான் கமிஷன் முன்பாகக் கொடுத்த வாக்குமூலம், கோவிந்தன் குட்டி என்பவர் எழுதிய 'இன்டிமேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் அப்போது வெளியாகி இருந்த சுப்பிரமணியன் சுவாமி பற்றிய விவரங்கள் ஆகிய விஷயங்களை மத்திய அரசு தீவிர மாக விசாரிக்கவேண்டும் என்று ஜெயின் கமிஷன் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்புக் குழு, இன்றுவரை இது தொடர்பாக விசாரிக்கவே இல்லை.


இதுபற்றியெல்லாம் சிந்திக்காமல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனியும் அரசி யல் லாபம் மட்டுமே கருதி பேசிக்கொண்டிருந் தால் அவர்களைத் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம்'' சஎன்று எச்சரிக்கும் தொனியில் முடித்தார் வேலுச்சாமி.
- ஜூனியர் விகடனில் வேலுசாமி பேட்டி

1 comment:

T.K. Ram said...

edhirum pudhirumaana jayalalithavum swamyum ondraga virundhu unbadhai edhirkum thaangal, yen edhirum pudhirumaaga, miga periya sandaigalodu pirindhu sendra vaiko, marupadiyum (pala murai) karunanidhiyodu kootani inaivadhai avvaru kandikkavillai? yen, ramadass adikaadha bultiya?